Tuesday 31 December 2019

2019 ஆம் ஆண்டிற்கு நன்றி!

2019 ஆம் ஆண்டிற்கு நன்றி! 



செல்லும் வருடத்திற்கு சொல்லால் நன்றி சொல்வோம்
வசந்தமோ வருத்தமோ உன்னுள் வாழ்ந்த சுவாசம் வரமே
வாழும் வழி சொல்லி போகும் ஆண்டிற்கு கோடி நன்றி
பிரிகின்ற வலியோடு பிரியாவிடை தருகிறோம் பிரியமான ஆண்டே!

வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு பதில் தந்த ஆண்டு
பல உறவுகள் உடைந்து வாழ்க்கை கேள்வி குறியானது
சில உறவுகள் இணைந்து வாழும் வாழ்வை அர்த்தமாக்கியது
ஆண்டுகள் எங்களை சிதைப்பதில்லை பண்படுத்தும் பாடசாலை

சிலருக்கு வெற்றிகள் மூலம் எதிர்காலத்திற்கான அத்திவாரம்
பலருக்கு தோல்விகள் மூலம் ஏமாற்ற இருள் சூழ்ந்த அஸ்தமனம்
வெற்றி தோல்விகள் எமை ஆட்டிவைக்காது அனுபவம் ஆளவேண்டும்
ஆண்டுக்குள் முழ்கி மூச்சடைப்பதல்ல முத்தெடுப்பதே அனுபவப்பாடம்!

பலருக்கு புதிய பிறப்புகள் மூலம் ஆனந்தம் அள்ளி தந்த வருடம்
பலருக்கு அநியாய இழப்புகள் மூலம் ஆனந்தம் அழித்த வருடம்
ஆண்டுகள் வரமாவதும் சாபமாவதும் மனிதனாய் வாழ்வதில்
மனிதனாய் மாறி வாழ சந்தர்ப்பம் தந்த ஆண்டிற்கு நன்றி

வீட்டையும் நாட்டையும் காக்கும் காவல் தெய்வங்களுக்கு நன்றி
இயற்கையை அழியாது காக்க துடிக்கும் இதயங்களிற்கு நன்றி
மனித மிருகத்தனத்தை கேள்வி கேட்கும் மனதிற்கு நன்றி
அநாதைக்கும் அன்னமிடும் அன்பின் கரங்களுக்கு நன்றி

வரும் வருடங்கள் யாவும் எமை வளப்படுத்தும் ஆய்வு கூடம்
அனுபவங்கள் பல தந்து முன்னேற வழி காட்டும் ஆசான்
செல்லும் வருடம் வரும் வருடத்தை நாம் சந்திக்க வாழ்த்தியது
ஆண்டுகள் பிரிந்தாலும் அனுபவங்கள் பிரியாது தொடரும்

By Prasanth Satkunanathan

Tuesday 17 December 2019

புன்னகை


புன்னகை 



ஒட்டு மொத்த மனித இனத்தின் மகத்தான பெருமை
மனித தனித்துவத்தின் மீது பிற உயிரின்பொறாமை
ஜனனம் முதல் மரணம் வரை அழகின் உயிர்த் துடிப்பு
புன்னகை கழித்து விழி காணாது  மெய் அழகின் தரிசனம்

புன்னகை அழகை தாண்டிய அன்பான வரவேற்பு
இன்பத்தை நிறுத்தி துன்பத்தை துரத்தும் காவலன்
உடல் கொல்லா  உயிர் கொடுக்கும் தொற்று நோய்
புன்னகை வீசின் உயிர் அற்றவையும் உயிர்பெறும்

மழையின் புன்னகையில் தாய்மை உணர்வாய்
தாய்மையின் புன்னகையில் கடவுளை காண்பாய்
தந்தையின் புன்னகையில் நட்பினை அறிவாய்
நட்பின் புன்னகையில் புது உறவே உதயமாகும்

தனிமையில் புன்னகை காதலின் சாட்சி
இசையில் புன்னகை ஸ்வரங்களின் ஆட்சி
உணவில் புன்னகை சுவையின் ஆட்சி
கஷ்டத்தில் புன்னகை மன பலத்தின் சாட்சி

பூக்களோடு புன்னகை காதலுக்கு தூதாகும்
நிலவோடு புன்னகை இருளே இனிமையாகும்
மழையோடு புன்னகை இயற்கை செழிப்பாகும்
இயற்கையோடு புன்னகை வாழ்வே வரமாகும்



By Prasanth Satkunanathan