Wednesday, 31 July 2019

தாய்மையான நட்பு!!!


தாய்மையான நட்பு!!!


உறவுகளின் தொடக்கம் அம்மா
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்

உணர்வுகளில் கரு உண்ட உறவு நட்பு
நட்பிலும் பகிரும் தாய்மை உணர்வு

தாயின்  கருவறையில்  வாழ்ந்தவரை
தாயின்  மூச்சு காற்றில் சுவாசித்தோம்

இதயவறையில் வைத்த  நட்பு வாழ்கிறது
சுகமான நட்பு சுவாசம் தொடரும் வரை

அம்மா என்ற உறவு அடையாளம் காட்டியது
அனைத்து  உறவுகளையும்

நட்பு என்ற ஒரு உறவில்
அனைத்து உறவுகளையும் காணலாம்

அம்மா இல்லமால் உயிர்கள் இவ் உலகம்
காண்பதற்கு சாத்தியம் இல்லை

நட்பு இல்லாமல் உயிர்கள் எவ் உலகம்
சென்றாலும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை

அம்மா நீ கண்ட பிரசவ வேதனை கூட
நீ உன் பிள்ளையை காண்பதற்கே

உயிர் நட்புகளின் ஒவ்வொரு பிரிவிலும்
உயிர் போகும் வலி தாய் கொண்ட வலி போல
  
அன்னையின் பிரிவில் கூட
அணைக்கும் நட்பு தொடரும் தாய்மை

நண்பர்கள் பிரியலாம் ஆனாலும் நட்பு பிரிவதில்லை
பிரிந்த நட்பின் நினைவிலும்
தொடரும் நட்பின் உயிரிலும்
இணையும் நட்பின் இனிமையிலும்
விலகாத நட்பே வாழ்க்கையின் விருந்து


By Prasanth Satkunanathan

Tuesday, 25 June 2019

தண்ணீர்


தண்ணீர்


உயிர் ஆகாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் தண்ணீரே மூலாதாரம்
பஞ்ச பூதங்களில் ஒன்றாய் உலகம் கருவாக உயர்வான காரணி
உலக சமநிலையை பேணுவதில் நிலையான இயற்கை நீதிபதி
தண்ணீர் இன்றிய தரணியில் அணுக்கள் கருவில் கலைந்திருக்கும்

புவி வாழ் உயிர்களின் தவிர்க்க முடியா ஆகாரம் தண்ணீர்
உயிர் தாகம் தொடரும் வரை நீர்த்தாகம் தொடரும்
தண்ணீர் இன்றி தாகம் என்ற பெயரே இல்லை
வறண்ட நாவிற்கு வரமான நீர் சொர்க்கலோக இன்பம்

இயற்கை எழினின் பசுமையின் பாதுகாவலன்
பூத்து குலுங்கும் பல வண்ண பூக்களின் ஆதாரம்
மழை நீரால் மண் நனைத்து நிலம் வனமானாது
இயற்கையின் இதயத்தில் ஓடும் குருதி தண்ணீர்

உலகில் நாட்டினை பிரித்து நீரல்ல பாது காப்பதே நீர்
விலை பேசாது உயிர் மதிப்பறிந்த ஒப்பற்ற பாசம்
பூமியிலும் மனித மேனியிலும் நீரின் அளவே அதிகம் 
உலகில் உயிர்கள் கருகாது காக்கும் உயிர் நாடி  

கடல் வாழ் உயிர்களின் உலகம்
மின்சார உற்பத்தியில் மூலதனம்
விவசாயத்தின் தீர்க்க தரிசி
நீரின் பயன் பாட்டின் பட்டியல் முடிவிலி
நீர் வளம் அனைத்துமே வரம்
உயிரான நீருக்கு விஷம் ஊட்டாதீர்
நீரை மாசுபடுத்தின் நீரின்றி அழிவோம்

By Prasanth Satkunanathan

Tuesday, 14 May 2019

அம்மா!

அம்மா!



ஜனனம் முதல் நான் நீ அனைவரும்
அதிகளவில் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தை அம்மா!
நான் அழ நீ சிரித்த ஒரே நாள் 
நாம் இருவரும் பார்த்து கொண்ட முதல் நொடிகள் மட்டுமே அம்மா!
உயிர் போகும் வலியில் கூட உயிர் தந்து 
நாம் உயிர் போகும் வலி கொடுத்தாலும் உயிராய் நேசிப்பது அம்மா!
எம்மை எல்லாம் படைத்தது, காத்து
கெட்டதை அழித்து அந்த இறைவனுக்கும் இறைவன் அம்மா!

தாயின் மடியில்  தொலைத்த தூக்கம் 
தாயின் சேலையில் கலையாத நிம்மதி 
சேய் அறிய முடியா தாய் மறந்த தூக்கம் 
அழிக்க முடியாத அன்பின்  அடையாளம்

அன்புக்கு பொறுமைக்கு உண்மைக்கு 
அனைத்து நல்ல வார்த்தைகளின் ஒரே உதாரணம் அம்மா!
உண்மையான நேச பரிமாற்றம் 
வேஷம் அற்று வெளிபடையாக பெறுவது நாம் - தருவது அம்மா!
ஆயிரம் மாற்றங்கள் வந்தும் மாறாதது 
காலத்தால் மாற்ற முடியாத மாற்றங்கள் இல்லாதவள் அம்மா!

பெத்தவள் அணைப்பில் 
மரணம் வந்தாலும் 
மறு பரீசிலனை பண்ணும் 
மண்டி இட்டு 
புன்னகை செய்து 
பிரிக்காது பிரியாவிடை பெறும்


இறைவனின் வரமாகவும் இயற்கையின் கொடையாகவும் 
எம்மை காத்து நிற்கின்ற கண் கண்ட தெய்வம் அம்மா!
நாம் எல்லோரும் இணைகின்ற 
ஒரே கலாச்சராம் கருவறை தாங்கிய கோவில் அது தான் அம்மா!

By Prasanth Satkunanathan

Tuesday, 23 April 2019


மனசாட்சியின் மன்றாட்டம்!!!


அன்னை சொல்லி தந்த அன்பு மறந்தாயா
உதிரம் கலந்த உறவுகள் பாசம் தொலைத்தாயா
இனம் மதம் மொழியால் மனிதனை கூறு போட்டு
இதயத்தை கொன்று இன்பத்தை யார் வெல்லுவார்

கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை மாறலாம் -ஆனால்
மனிதத்தை தொலைத்து மத வெறி கொள்வதேன்
கருணையும் அன்பும் தொலைத்தா கடவுள் வழி
இறைவன் பெயரால் இதயத்தை கூறு போடாதே

அன்பின் மொழி அகிலத்தை இணைக்காது 
வெறும் பேசும் மொழி நம்மை பிரிப்பதா
மொழியின் பேர் கொண்டு போர் செய்யாதே
மொழி என்பது வேறுபாடு அது வெறியாகலாகாது

அன்பு என்பது அடுத்தவரை புரிதலும் ஏற்றலுமே
வேறுபாடுகளை விரும்புவதில்தான் அன்பு பகிரும்
உணரும் உணர்வுகளும்  ஓடும் உதிரமும் வேறல்ல
உயிர்பலி எடுக்கவா உயிர் வலி கொடுத்து பிறந்தீர்கள்

உணர்வினை அடிமையாக்கி மிருகமாக்கும் தீவிரவாதம்
உதிரத்தை குடித்து உயிரினை கொன்று போதை ஏறும் 
மனிதம் மரணித்த வெறும் வெறியர்கள் தீவிரவாதிகள்
இதயமற்றவர்ளுக்கு இனம் மதம் மொழி ஏதும் இல்லை

அடுத்தவர் இறப்பிலும் அரசியல் செய்யும் மூடர்கள் பலர்
இறப்பிலும் இனம் மொழி மத அடிப்படியில் கணக்கு பார்ப்பார்
இறப்பிலும் கணக்கு பாரத்து கருத்து கூறும் அறிவு
இதயத்திற்கு வலி கூட்டுவதில்லை ,இன்னும் இறப்பிற்கு வழி காட்டும்



அன்பும் மனிதமும் நிலைக்க வேண்டும் எனின்
மனிதனாய் முதலில் நீ உன்னை அடையாளப்படுத்து
பிள்ளைகளுக்கு மதத்தை விதைக்க முன் மனிதத்தை விதை
ஏற்ற தாழ்வு மன நிலையை குழி தோண்டி புதை
புண்படுத்தும் வார்த்தைகளை மறந்தும் உதிர்க்காதே
பாகுபாடு காட்டி பொறாமையை  தூண்டாதே
உன் சுயநல கருத்துக்களை பொது மேடையில் பரப்பாதே
உணர்வுகளை தூண்டி உயிர்களை கொல்ல   கருத்து கூறாதே
ஆசைகள் கனவுகள் எல்லோருக்கும் உண்டு
நீயும் வாழ் மற்றவர்களையும் வாழ விடு
சக மனித உதிரம் உனக்கு உயிர் போகும் வலி தரவில்லை
உன் கண்ணில் நீர் வரவில்லை எனின் மனிதம் உன்னிலும் இல்லை
மனிதன் மனிதனை கொன்று மனிதத்தை என்றுமே  விதைக்க முடியாது
மனசாட்சியின் மன்றாட்டம் மனசாட்சி தொலைத்து வாழாதே 

By Prasanth Satkunanathan

Tuesday, 9 April 2019

காத்திருப்பு


காத்திருப்பு

பிறப்பிற்கும் இறப்பிற்குமான காத்திருப்பே வாழ்க்கை 
இன்பத்தின் அளவு கோல் காத்திருப்பின் இடைவெளி
காத்திருப்பின்றி வலியும் வசந்தமுமும் வெறும் சொற்கள்
காத்திருப்பே தவம் என்றால் மனிதரும் முனிவர்களே 

காத்திருப்பே தீர்மானிக்கும் இயற்கையின் வசந்தம்
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மண்ணிலே வித்து 
மனிதனின் காத்திருப்பு வித்து விருட்ஷமாகி வளம் பெற
காத்திருப்பின்றி இயற்க்கையில் வசந்த வழி இல்லை

கருவான உயிர் உலகை காண்பதற்கான காத்திருப்பு
பத்து மாதம் சுமந்து, சேய் வருகை எதிர்பார்த்து தாய்
அப்பா என அழைக்க, பிள்ளை வர காத்திருக்கும் தந்தை
பிள்ளைக்காக பெற்றவர் காத்திருப்பே பாச இணைப்பு

பள்ளி பரீட்ச்சை  முடிவுக்கான காத்திருப்பு, எதிர்காலம்
பல்கலைகழக படிப்பு, இலட்சிய கனவை எதிர்பார்த்து
எதிர்பார்த்த வேலைக்கான காத்திருப்பு, பண தேடல்
பண தேடலின் எதிர்பார்ப்பு, சந்தோச வாழ்வின்  வழி.

காதலில் காத்திருப்பு, காதலை வலுப்படுத்தும்
பிரிவில் காத்திருப்பு, இதயத்தை புண்படுத்தும்
காத்திருப்பின்றிய காதலில் பிரிதல் முடிவாகும்
காத்திருந்த காதலில் இன்பமே  தினம் முடிவாகும்

கண்களின் காத்திருப்பு வெளிச்சம்
செவிகளின் காத்திருப்பு சப்தம்
இதழ்களின் காத்திருப்பு புன்னகை
உணர்வுகளின் காத்திருப்பு, உடல் தாண்டி உரையாட

மொழியின் காத்திருப்பு உரையாடல்
உரையாடலின் காத்திருப்பு சமாதானம்
சமாதானத்தின் காத்திருப்பு சந்தோசம்
வாழ்க்கையில் காத்திருப்பே சுக சுபம்

தமிழின் காத்திருப்பு அங்கீகாரத்திற்காய்
தமிழரின் காத்திருப்பு தலைவனுக்காய்
தலைவனின் காத்திருப்பு மக்களுக்காய் 
மக்களின்  காத்திருப்பு தாயக விடிவிற்காய்


By Prasanth SatkunanathaN

Tuesday, 26 March 2019

கடல்



#கடல்

கடல் எல்லை கொண்டு கடவுள் வரைந்த கோலம் பூமி 
பூமியின் பெரும் பகுதி தான் என்பதே கடலின் கர்வம்
அலை ஓசை  இயற்கையின் இடைவிடா உயிர்த்தாலாட்டு
தரை வாழ் உயிர்களின் கொடை கடல் வாழ் உயிர்கள்

இயற்கை தந்த இலவச  விருந்தும் மருந்தும் கடல்
கருணையின் உறைவிடம் கர்ணனின் மறு வடிவம்
கடலின் வளங்களும்  கொடுக்கும் கொடையும் கோடி
மீனவர்கள் கொண்டாடி வழி படும் குல சாமி கடல் 

நவீனம் வளர்வதற்கு முன்பே உலகை இணைத்த இணையம்
நாடுகளின் கண்டு பிடிப்பிற்கும் பயணத்திற்கும் பாதையாய்
வணிகம் வளர்வதற்கும் செல்வம் பெருகுவதற்கும் கருவியாய்
கடல் வழி பயணம் என்றென்றும் தொடரும் காதல் பயணம்

கடற்கரை காற்று பூமி தாய் முத்தமிடும் உணர்வு
மீள விரும்பா இறுக்கம் கடல் காற்றின் அணைப்பு
உப்பு நீரில் உயிர் பூக்கும் அதிசயம் கடற்காற்று 
சுற்றுலா பிரியர்கள் சுவாசிக்க விரும்பும் காற்று

வெறுக்க முடியா விரும்பி செல்லும் இடம் கடற்கரை
பொன்மாலை வேளை கண்களுக்கு விருந்தாகும் காட்சி 
இயற்கையின் மேடையில் இறைவனின் வர்ணாஜால வித்தை
கவிதையும் காதலும் கற்பிக்கப்படும் நூலகம் கடற்கரை

உன்னைப் பெற்ற தாய் போல கடல் அன்னை
உனக்கு சுகம் சேர்த்த கடலை அசுத்தம் செய்யாதே
உப்புள்ள கடல் ,உப்பிட்ட கடல், உயிர் போல நினை

இயற்கையே கடவுள், வதைக்காது வணங்குவதே இன்பம்

By Prasanth Satkunananthan

Tuesday, 12 March 2019

இதயம்


இதயம்

கருவறையில் உயிரான அன்பின் அடையாளம்
மனிதம் என்பதன் இன்னொரு பெயர்
துடிப்புள்ள வரைதான் ஆயுளின் பயணம் தொடரும்
இதயம் சொல்லும் போதே இரத்தம் தித்திக்கும் 

உலக காதலின் உயர்வான ஒற்றை அடையாளம்
விழிகள் பார்க்க பறிபோக விரும்பும் திருட்டு
காதல் கருவாகி உயிராகி உறவாகும் ஆலயம்
காதல் இல்லா இதயம் உணர்வில்லா உயிர்

கருவிலேயே கட்டப்பட்ட மனித நீதி மன்றம்
மனசாட்சியை மீறியவர்க்கே மக்கள் நீதி மன்றம்
உனை தீர்மானிக்கும் உணர்வுகளின் உதயம்
இதயம் மௌனித்தால் மனிதம் மரணிக்கும்

உடல் ஆரோக்கியம் வாழ் நாளை கூட்டும்
உள ஆரோக்கியம் ஆத்ம சுகத்தை கூட்டும்
உடலுக்கு தேவை  சத்து உள்ளத்திற்கு தேவை சத்தியம்
துடிக்கும் இதயத்திற்கு நடிக்க கற்று கொடுக்காதீர்கள்  

மனிதரை நேசிக்கும்
மனசாட்சியோடு வாழ வைக்கும்
காதலை கருக்கட்டும்
இசையில் தித்திக்கும்
இயற்கையோடு உறவாடும்
இறைவனை ஆராதிக்கும்
இன்பத்தை அள்ளிக்கொடுக்கும்
இதயத்தோடு பேசுங்கள்
இன்பமே முடிவாகும்

வாழ்க்கை வரமாகும்  

By Prasanth Satkunanathan