Tuesday 23 April 2019


மனசாட்சியின் மன்றாட்டம்!!!


அன்னை சொல்லி தந்த அன்பு மறந்தாயா
உதிரம் கலந்த உறவுகள் பாசம் தொலைத்தாயா
இனம் மதம் மொழியால் மனிதனை கூறு போட்டு
இதயத்தை கொன்று இன்பத்தை யார் வெல்லுவார்

கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை மாறலாம் -ஆனால்
மனிதத்தை தொலைத்து மத வெறி கொள்வதேன்
கருணையும் அன்பும் தொலைத்தா கடவுள் வழி
இறைவன் பெயரால் இதயத்தை கூறு போடாதே

அன்பின் மொழி அகிலத்தை இணைக்காது 
வெறும் பேசும் மொழி நம்மை பிரிப்பதா
மொழியின் பேர் கொண்டு போர் செய்யாதே
மொழி என்பது வேறுபாடு அது வெறியாகலாகாது

அன்பு என்பது அடுத்தவரை புரிதலும் ஏற்றலுமே
வேறுபாடுகளை விரும்புவதில்தான் அன்பு பகிரும்
உணரும் உணர்வுகளும்  ஓடும் உதிரமும் வேறல்ல
உயிர்பலி எடுக்கவா உயிர் வலி கொடுத்து பிறந்தீர்கள்

உணர்வினை அடிமையாக்கி மிருகமாக்கும் தீவிரவாதம்
உதிரத்தை குடித்து உயிரினை கொன்று போதை ஏறும் 
மனிதம் மரணித்த வெறும் வெறியர்கள் தீவிரவாதிகள்
இதயமற்றவர்ளுக்கு இனம் மதம் மொழி ஏதும் இல்லை

அடுத்தவர் இறப்பிலும் அரசியல் செய்யும் மூடர்கள் பலர்
இறப்பிலும் இனம் மொழி மத அடிப்படியில் கணக்கு பார்ப்பார்
இறப்பிலும் கணக்கு பாரத்து கருத்து கூறும் அறிவு
இதயத்திற்கு வலி கூட்டுவதில்லை ,இன்னும் இறப்பிற்கு வழி காட்டும்



அன்பும் மனிதமும் நிலைக்க வேண்டும் எனின்
மனிதனாய் முதலில் நீ உன்னை அடையாளப்படுத்து
பிள்ளைகளுக்கு மதத்தை விதைக்க முன் மனிதத்தை விதை
ஏற்ற தாழ்வு மன நிலையை குழி தோண்டி புதை
புண்படுத்தும் வார்த்தைகளை மறந்தும் உதிர்க்காதே
பாகுபாடு காட்டி பொறாமையை  தூண்டாதே
உன் சுயநல கருத்துக்களை பொது மேடையில் பரப்பாதே
உணர்வுகளை தூண்டி உயிர்களை கொல்ல   கருத்து கூறாதே
ஆசைகள் கனவுகள் எல்லோருக்கும் உண்டு
நீயும் வாழ் மற்றவர்களையும் வாழ விடு
சக மனித உதிரம் உனக்கு உயிர் போகும் வலி தரவில்லை
உன் கண்ணில் நீர் வரவில்லை எனின் மனிதம் உன்னிலும் இல்லை
மனிதன் மனிதனை கொன்று மனிதத்தை என்றுமே  விதைக்க முடியாது
மனசாட்சியின் மன்றாட்டம் மனசாட்சி தொலைத்து வாழாதே 

By Prasanth Satkunanathan

No comments:

Post a Comment