Tuesday 29 May 2018

காதல் கண்ணன் !!!


காதல் கண்ணன் !!!

ஆயர் பாடியில் பிறந்தவன்
கோகுலத்தில் குடி புகுந்தவன்
இளமை ஆட்கொண்ட இடையன்
இதயம் கவர்ந்த  காதல் கண்ணன்

வண்ணங்கள் ஏங்கும் உன் கரு மேனி
அழகின் இலக்கணத்தை மாற்றிய மாய மேனி
மழை தரா கரு நீல தேகம் உனது
மனதிற்குள் காதல் மழை தந்த மாயன்

மாலையாய் உன் தோள்  சேர மலர்கள் தவம்
மயில் இறகை நீ சூடியதோ மயில் பெற்ற வரம்
உனை அலங்கரித்த யாவுமே அழகுப் பொருளானது
உனை வர்ணித்த வார்த்தைகள் அழகின் அர்த்தமானது

இயற்கையைத்  தாலாட்டும் புல்லாங்குழல் ஓசை
இனிமைக்கு பொருள் சேர்க்கும் இன்னிசை
உன் மூச்சு காற்று கலந்து வரும் ஜீவ இசையில்
இதயத்தில் கருவாகும் ஆத்மீக காதல்

கண்களால் வர்ணிக்க கண்கள் காணாது 
மொழிகளால் சொல்வதற்கு மூச்சு போதாது
அழகால் காதல் ஆட்சி செய்யும் கண்ணா
அன்பால் எனை ஆழும்  நாள் எப்போது மாயவா

By Prasanth Satkunanathan (Heart Beat )

No comments:

Post a Comment